ஆறுபடை வீடு முருகன் தலங்கள்

 #india info now #Arupadai Veedu murugan temples

திருப்பரங்குன்றம் – முதல் படைவீடு

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில் ஒரு குகைக் கோவில் ஆகும். மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட இந்த கருவறையில் ஐந்து குகைகள் உள்ளன. இங்கு
சுப்பிரமணியசுவாமி, துர்காதேவி, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய ஐந்து சந்நிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன.

இந்த தலம் ஆறுபடை வீடுகளில் முதற்படைவீடு என்றும், பாண்டியநாட்டு 14 திருத்தலங்களில் ஒன்று என்றும் போற்றப்படுகிறது. சூரனை வென்று திரும்பிய முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானையை திருமணம் செய்து கொடுத்த புனித தலம் இதுவாகும். நாரதர் முன்னிலையில் நடைபெற்ற அந்த திருமணத்தின் திருக்கோலமே இங்கு முருகனின் மூலவடிவமாக காட்சியளிக்கிறது. இதனால், முருகனுக்கு சுப்பிரமணியசுவாமி” என்ற திருநாமம் வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் – இரண்டாம் படைவீடு

திருச்செந்தூர் முருகன் கோவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள தனிச்சிறப்புடைய திருத்தலமாகும். தேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்த தலம் இதுவே.

தேவர்களின் வேண்டுதலுக்கிணங்க, சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உருவாக்கினார். அதிலிருந்து தோன்றிய முருகப்பெருமான், தேவசேனாதிபதியாக இத்தலத்தில் சூரபத்மனை வதம் செய்தார். போர் தொடங்கும் முன், முருகன் தனது தூதராக வீரபாகுவை அனுப்பினார். அவன் வார்த்தையை ஏற்காததால், இறுதியில் சூரன் அழிக்கப்பட்டான். சூரசம்ஹாரம் நிகழ்ந்த புனித தலம் இதுவாகும்.

பழனி – மூன்றாம் படைவீடு

பழனி மலையின் உச்சியில், மேற்குத் திசை நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலில், முருகன் தண்டாயுதபாணி என்ற ஆண்டி கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

மூலவர் சிலை, சித்தர் போகரால் நவபாஷாணம் எனப்படும் ஒன்பது மருத்துவப் பொருட்களால் உருவாக்கப்பட்டது. இந்த சிலை காற்று, நீர், நெய், தேன், எண்ணெய், நெருப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படாத தன்மை கொண்டது. நவபாஷாணத்திற்கு நோய்நிவாரண சக்தியும், ஆயுள் விருத்தி வல்லமையும் உண்டு என நம்பப்படுகிறது.

ஞானப்பழக் கதையில் விநாயகன் வெற்றி பெற்றதால், மனம் நொந்த குமரன் அனைத்தையும் துறந்து இம்மலையில் தங்கினார். அதனால் “பழம் நீ” என அழைக்கப்பட்ட இடமே பின்னர் பழனி என்றாயிற்று.

சுவாமிமலை – நான்காம் படைவீடு

சுவாமிமலை என்பது சிவபெருமானுக்கே ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த தலம் ஆகும். இதனால் முருகன் இங்கு தகப்பன் சுவாமி’ என அழைக்கப்படுகிறார்.

மூலவர் அடி உயரத்தில், தலையில் குடுமியுடன், மார்பில் பூணூலுடன், வலக்கரத்தில் தண்டாயுதம் தாங்கி, யோக நிலையில் குருநாதராக அருள்பாலிக்கிறார். இத்தலம் குருமலை, கந்தாசலம், சிரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
சோழ நாட்டை ஒரு சிவத்தலமாகக் கருதும் வழிபாட்டு முறையில், திருவலஞ்சுழி – விநாயகர்சுவாமிமலை – முருகன் சன்னதியாக மதிக்கப்படுகிறது.

திருத்தணி – ஐந்தாம் படைவீடு

திருத்தணி மலையின் உச்சியில், கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவில், முருகன் அமைதி பெற்ற தலமாக விளங்குகிறது.

திருத்தணிகை புராணம் படி,
திருத்தணியை நினைத்தாலோ,
அதன் திசை நோக்கித் தொழுதாலோ,
பத்தடி தூரம் சென்றாலோ –
நோய்கள் நீங்கும் என கூறப்படுகிறது.

கந்த புராணத்தில், “ஐந்து நாட்கள் திருத்தணியில் தங்கி வழிபட்டால் வீடுபேறு கிடைக்கும்” என முருகன் வள்ளியிடம் உரைத்ததாக கூறப்படுகிறது. ஆடி, தை, மாசி கிருத்திகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பூக்காவடி எடுத்துப் பிரார்த்தனை செய்கின்றனர்.

பழமுதிர்சோலை – ஆறாம் படைவீடு

பழமுதிர்சோலை, அழகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது சைவ – வைணவ பாரம்பரியங்கள் ஒன்றிணையும் அரிய திருத்தலம்.

மேலே மலைச்சோலையில் சண்முகன் தன் தேவிமாருடன் அருள்பாலிக்க, கீழே கள்ளழகர் (சுந்தரராஜப் பெருமாள்) நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் இந்த தலத்தை பழமுதிர்சோலை மலைகிழவனே” என்று போற்றுகிறார்.

இத்தலத்து நாவல் மரத்தில், இயல்புக்கு மாறாக ஐப்பசி மாதத்திலேயே பழம் பழுக்கும் அதிசயம் நிகழ்கிறது.
வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

Comments